மோட்டார் சைக்கிள் பாகங்கள் திருட்டு : அச்சத்தில் புந்தோங் ஹார்மோனி
அடுக்குமாடி குடியிருப்பாளர்கள்
ஈப்போ
இங்குள்ள தாமன் புந்தோங் ஹார்மோனி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின்
தரைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் திருடப்படும் சம்பவம் இப்பகுதி குடியிருப்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது இத்திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களின் மோட்டார் சைக்கிள்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்தாலும் அடிக்கடி
அதன் பாகங்கள் திருடப்படுகின்றன என இங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், கார்பரேட்டர் ஆகிய பாகங்கள் திருடப்படுகின்றதாகவும் அடிக்கடி இங்கு நிறுத்தி வைக்கபடும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதும் உண்டு என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இங்குள்ள பாதுகாவலர் அறை பெரும்பாலும் காலியாகவே
இருந்ததாகவும், சில திருட்டுச் சம்பவங்கள் நடக்கும்போது பாதுகாவலர் பணியில் இருந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கீ ழ் இருக்கும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் பி40 மக்கள்
அதிகமாக வசிக்கும் இடம் எனத் தெரிவிக்கப்பட்டதோடு மெயிண்டேனன்ஸ் கட்டணத்தையும் சேர்த்துதான் வாடகையாகச் செலுத்துவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த மெயிண்டேனன்ஸ் கட்டணத்தில் துப்புரவு பணி முதல் பாதுகாவலர் சேவை வரை அடங்கும். இருந்தும் பாதுகாவலர் சேவை தங்களுக்குப் பாதுகாப்பாய் அமைவதில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இப்பகுதிக்கு 2 வாசல்கள் இருப்பதாகவும் அதில் ஒரு வாசல்
மட்டுமே திறக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டாலும் இரண்டு வாசல்களுக்குமே பாதுகாவலர் அறை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் எவ்விதப் பயனும் இல்லாமல் பெரும்பாலும் அவை காலியாகவே இருப்பதாக இங்குள்ள மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பாதுகாவலர் பணியில் இருந்தும் திருட்டுச் சம்பவங்கள் நடந்திருப்பதைப்
பார்க்கும்போது கள்வர்களுக்கும் பாதுகாவலருக்கும் தொடர்பு இருக்கிறதா ? அல்லது கள்வர்கள் உள்ளேயே இருப்பவர்களா ? அல்லது பாதுகாவலர்கள் முறையாக ரோந்துப் பணியைச் செய்வதில்லையா எனக் கேள்வியை எழுப்பும் மக்கள் பல சமயங்களில் பாதுகாவலர்கள் பணிக்கே வருவதில்லை எனும் புகாரையும் முன்வைக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இங்கு பாதுகாவலர் அறை பூட்டி
இருப்பதோடு பாதுகாவலர் யாரும் பணியில் இருப்பதாகத் தெரியவில்லை. கோவிட்-19 தொற்றுப் பரவல்; அதனால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை; அதன் பொருட்டு வருவாய் இழந்திருக்கும் மக்கள் என ஏற்கெனவே மும்முனைப் பிரச்சனையில் இருக்கும் தாமான் புந்தோங் ஹார்மோனி மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்குத் தற்சமயம் தலை தூக்கியுள்ள இந்த நான்காம் முனை பிரச்சனை தங்களை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ என்ற வேதனையில் இருக்கின்றனர் என வருத்தம் தெரிவித்துள்ளனர். எப்போதுமே பூட்டப்பட்டு செயல்பாட்டில் இல்லாத பாதுகாவலர் அறையும் பயன்படுத்தப்படாத பின் வாசலும்
செயல்படாத பின் வாசலில் இருக்கும் பாதுகாவலர் அறை
சமீ ப காலமாகப் பூட்டப் பட்டு காலியாக இருக்கும் முன் வாசல் பாதுகாவலர் அறை (வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டப் படங்கள்) கார்பரேட்டர் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் பின் சக்கரம் திருடப்பட்ட வண்டி
கேரியர் திருட முயற்சி செய்யப்பட்ட இரு சக்கர வாகனம்