Professional Documents
Culture Documents
E-BOOK - நோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி
E-BOOK - நோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி
நீண்டு வளரும் காய்கள்… காரம் கொஞ்சம் அதிகம்… கூடவே மருத்துவக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை
- அதுதான் திப்பிலி. `அஞ்சறைப் பெட்டி’யில் குடியிருக்கும் நோய் தடுக்கும் காவல்வீரன்!
மருத்துவக் குணம் நிறைந்த திப்பிலியின் பிறப்பிடம் இந்தியா என்பதால் நாம் பெருமை கொள்ளலாம்.
பீகாரின் ‘மகத நாடு’ பகுதிகளில் திப்பிலி அதிகமாக விளைந்ததால், பழைய நூல்களில் ‘மகதி’ என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விளைந்தாலும், மேற்குத்தொடர்ச்சி
மலைக்காடுகளில்தான் திப்பிலிக் கொடிகள் மிகவும் வீரியமாக வளர்கின்றன. மழைவளம் மிக்க சிரபுஞ்சி
பகுதிகளிலும் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
கனை, செளண்டி, கலினி, பிப்பிலி, அம்பு, ஆதிமருந்து, வைதேகி, சரம், குடாரி, உண்சரம், உலவைநாசி,
சாடி, பாணம் எனப் பல்வேறு காரணப் பெயர்களையும் வழக்குப் பெயர்களையும் கொண்ட திப்பிலி,
உடலில் வெப்பத்தை உண்டாக்கி, கபத்தை அறுக்கும். உடலில் உண்டாகும் வாய்வை அகற்றி, செரிமான
உறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும்.
திப்பிலியின் வேர்களுக்கு `திப்பிலி மூலம்’ என்று பெயர். காம உணர்வைத் தூண்டுவதுடன் சிறுநீர்ப்
பெருக்கி செய்கைகளும் இந்த வேருக்கு உண்டு. திப்பிலி வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும்
மருத்துவக் குணங்கள் அதிகம். நாக்பூர் பகுதியில் பானங்களை நொதிக்க வைப்பதற்காக இதன் வேர்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
தேமலை நீக்க, திப்பிலியைப் பொடியைத் தேனில் கலந்து ஒரு மாதம் சாப்பிடச் சொல்கிறது தேரன்
காப்பியம் நூல். திப்பிலிப் பொடியை நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
நீர்த்துப்போன விந்தைக் கெட்டிப்படுத்த, அஞ்சறைப்பெட்டிக்குள் இருக்க வேண்டிய முக்கியமான
மூலப்பொருள் திப்பிலி. திரிகடுகு சூரணத்தின் மருத்துவக் குணத்துக்குச் சுக்கு, மிளகுடன் சேர்ந்து
அதிலிருக்கும் திப்பிலியும் மிக முக்கியக் காரணமாகும். மிளகைவிட அதிக காரத்தன்மை கொண்டது.
சோர்வாக இருக்கும்போது, வெந்நீர் அல்லது தேநீரில் சிறிது திப்பிலிப் பொடியைச் சேர்த்துக்
குடிக்கலாம்.
வாதசுரக் குடிநீர், குமரி நெய், திப்பிலி ரசாயனம் என நிறைய மருந்து வகைகளிலும் திப்பிலி
சேர்க்கப்படுகிறது. நாள்பட்ட கபநோய்களை அழிப்பதற்கான வீரியம், திப்பிலி ரசாயனத்துக்கு உண்டு.
தனியா, மஞ்சள், மிளகாய் சேர்த்துக் குழம்புப் பொடி அரைக்கும்போது, இனிமேல் கொஞ்சம்
திப்பிலியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்புப் பொடி, மருந்துப் பொடியாக உருமாறும்.
திப்பிலி, மிளகு மற்றும் இஞ்சியை அரைத்து, இறைச்சித் துண்டுகளின் உள்ளும் புறமும் தடவிச்
சமைக்கும் அசைவ உணவுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம் என மருத்துவ நூல்கள் பதிவு
செய்துள்ளன. திப்பிலி, மிளகு, மஞ்சள், திராட்சை ரசம், தேன் மற்றும் அரிசியுடன் தண்ணீர் சேர்த்து
நொதிக்க வைத்த பானம், பண்டைய காலங்களில் மருந்தாக அதிகளவில் பருகப்பட்டுள்ளது. திப்பிலி,
இஞ்சி, ஏலம், வெண்ணெய், நெய், ஆட்டுப்பால், கசகசா, பேரீச்சை, கொண்டைக்கடலை, பாதாம், அத்தி,
தேனுடன் சேர்த்து அரைத்துத் தயாரிக்கப்படும் உணவு ஆண்மைக்குறைவைப் போக்குவதாக முகலாய
நூல்களில் குறிப்பிட்டுள்ளன.
இருமல் சூரணம்
ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்த் தோல், அக்ரகாரம்ச், சித்தரத்தைச் சம அளவு எடுத்து அரைத்து
நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். அதில் ஐந்து சிட்டிகை அளவு வாயில் அடக்கிக்கொண்டால்,
கோழை வெளியேறி வறட்டு இருமல் அடங்கும்.
விக்கல் சூரணம்
எட்டு பங்கு திப்பிலி, பத்து பங்கு சீரகத்தை அரைத்து வைத்துக்கொண்டு, சிறிதளவு தேனில் குழைத்துச்
சாப்பிட்டால் விக்கல் அடங்கும்.
யவகு (Yavagu)
அரிசி அல்லது பார்லி கஞ்சியில் திப்பிலி, நெய் கலந்து செய்யப்படும் `யவகு’ என்னும் கஞ்சி வகை,
பசியை அதிகரித்து, உணவின் சாரங்களை முழுமையாக உறிஞ்சப் பயன்படுகிறது. இந்தியாவின் மேற்குப்
பகுதிகளில் இப்போதும் `யவகு’ பிரபலம். காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவும்
இதைப் பயன்படுத்தலாம்.
சட்டகா (Sattaka) தயிருடன் பனங்கற்கண்டு, சுக்கு, திப்பிலி, மிளகு சேர்த்து மெல்லிய துணியில் வடிகட்டி,
அதில் மாதுளை விதைகளைத் தூவிச் சாப்பிடும் சுவைமிக்க நொறுவை நம்மிடையே வழக்கத்தில்
இருந்திருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சறைப் பெட்டியில் `தனித்துவமான ஒருவன்’ பூண்டு
பூண்டு, துளசி, ஆலிவ் எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் `பெஸ்டோ’ சாஸ், இத்தாலி நாட்டில்
புழக்கத்திலிருக்கிறது. பூண்டு, கொண்டைக் கடலை, ஆலிவ் எண்ணெய் மற்றும் சில கொட்டை
வகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் சுவைமிக்க உணவுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் `ஹம்மஸ்’
என்று பெயர். அமெரிக்காவில் உள்ள `தி ஸ்டிங்கிங் ரோஸ்’ உணவகத்தின் அனைத்து உணவு
வகைகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டு ஐஸ்க்ரீம் அந்த உணவகத்தின் சிறப்பு.
பூண்டின் வாசனைக்கும் குணத்துக்கும் அதிலிருக்கும் `அல்லிசின்’, ‘அல்லிசாடின்’ ஆகிய பொருள்களே
காரணம். போலந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், பூண்டின் சத்துகள் உயர் ரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, டி.என்.ஏ-வுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பது தெரியவந்தது.
அதிக ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன் ரத்தக் குழாய்களில் உருவாகும் கொழுப்புப் படிமங்களைச்
சிதைத்து மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படாத வகையில் பூண்டு பார்த்துக்கொள்ளும். சருமத்துக்கு
ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் பூண்டு உதவும்.
வேகவைத்த சாதத்துடன் நெய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்துச் சமைக்கப்படும் `கட்டோகாரா’ எனப்படும்
உணவு ரகம், பத்தாம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் மிகவும் பிரபலம். அரைத்த பூண்டுப் பற்களை
திராட்சை ரசம் அல்லது பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் பருகும் வழக்கம்
நெடுங்காலமாக இருந்திருக்கிறது.
அடோபோ: தலா இரண்டு டீஸ்பூன் மிளகு மற்றும் சீரகத்தை மிதமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அந்தக் கலவையுடன் உலர்ந்த கொத்தமல்லி இலைகள், இரண்டு டீஸ்பூன் பூண்டுப்பொடி, இரண்டு
டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அரைத்தால் `அடோபோ’ எனப்படும்
பொடி தயார். கியூபா நாட்டு உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பொடி, பெரும்பாலான உணவு
மேஜைகளில் காணப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மஞ்சளும் குங்குமப்பூவும் கலந்து செய்யப்படும் `ஹரிரா’ (Harira) எனும் `சூப்' ரகத்தை மொராக்கோ
நாட்டினர் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் மஞ்சள் நிற
கேக் லெபனான் நாட்டில் பிரசித்திபெற்ற சிற்றுண்டியாகும். மத்தியக் கிழக்கு நாடுகளில் அசைவ
உணவுகளுக்குச் சுவையூட்டப் பயன்படும் `செர்மவுலா’ (Chermoula) எனப்படும் மசாலா வகையில்
மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. தேநீருடன் மஞ்சள் கலந்து பருகும் வழக்கம் ஜப்பானியர்களிடம்
இருக்கிறது.
புற்றுநோய், நீரிழிவு, இதயநோய் எனப் பல நோய்கள் வராமல் தடுக்க உதவும் மஞ்சளின் மருத்துவச்
செயல்பாட்டுக்கு இதிலுள்ள ‘குர்குமின்’ (Curcumin) எனும் வேதிப்பொருள்தான் காரணம். உடலில்
வீக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகளைக் கட்டுப்படுத்துவதால், மூட்டுவலி உண்டாகாமல்
பார்த்துக்கொள்ளும். ரத்தக்குழாய்களில் ஏற்படும் காயத்தைக் குணப்படுத்துவதில் தொடங்கி மருந்துகளின்
செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பது என மஞ்சளின்
தன்மை தனித்துவமானது. பித்த நீரை முறையாகச் சுரக்கச் செய்து, செரிமானப் பிரச்னைகளைச்
சீர்செய்யக்கூடியது.
மஞ்சளின் நோய் தீர்க்கும் குணத்தை அதிகரிக்க, மஞ்சளுடன் அதிக அளவில் மிளகு சேர்த்துச்
சமைக்கலாம். மஞ்சளின் `குர்குமின்’ மிளகில் உள்ள `பைப்பெரின்’ என்ற ஆல்கலாய்டுடன் கூட்டுச்
சேர்ந்து நோய்களை எதிர்த்துப் போராடும். குடல்பகுதியில் `குர்குமின்’ உறிஞ்சப்படும் வேகத்தை
அதிகரிக்க `பைப்பெரின்’ உதவுகிறது. சளி, இருமல் இருக்கும்போது பாலுடன் மஞ்சள், மிளகுத்தூள்
சேர்த்து அருந்தும் அறிவியல் பின்னணி இதுதான். வெங்காயத்தில் உள்ள தாவர வேதிப்பொருள்களும்
மஞ்சளின் குர்குமினும் வினைபுரிந்து, நோய்களின் வீரியத்தைத் தடுக்கின்றன.
உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க மஞ்சள், குப்பைமேனி, வேப்பிலை சேர்த்து அரைத்துப்
பூசலாம். மஞ்சள், பால், பச்சைப்பயறு மாவு, அரைத்த சந்தனம் சேர்ந்த கலவை சிறந்த முகப்பூச்சுக்
கலவையாகும். குழந்தைகளைக் குளிப்பாட்ட மஞ்சள் பயன்பட்டதாக இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
சுண்ணாம்புத்தூள், மரத்தூள், மாவுப் பொருள் ஆகியவை மஞ்சளில் சேர்க்கப்படும் கலப்படப்
பொருள்களாகும். முற்காலத்தில் இயற்கைச் சாயம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மஞ்சளில்,
இப்போது தீமை விளைவிக்கும் `லெட்-குரோமேட்’, `மெடானில் யெல்லோ’ போன்ற செயற்கைச்
சாயங்கள் கலக்கப்படுகின்றன. நேரடியாக மஞ்சள் கிழங்குகளை வாங்கி உலரவைத்துப் பயன்படுத்துவதே
சிறந்தது.
மஞ்சள் ரெசிப்பிகள்
விண்டலூ (Vindaloo) கறி மசாலா
நான்கு டீஸ்பூன் பொடித்த சீரகம், தலா இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள்,
மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, கடுகுத்தூளுடன் உப்பு சேர்க்க வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு
அரை கப் வினிகர் ஊற்றி வெண்ணெய்ப் பதம் வரும் வரை கலக்க வேண்டும். ஒரு சட்டியில்
நல்லெண்ணெய் ஊற்றி, மேலே சொன்ன கலவையைச் சேர்த்து, 10 நிமிடங்கள் சிறு தீயில் எரியூட்டினால்
மணமும் நெடியும் சேர்ந்த மசாலா தயார். காரமும் விறுவிறுப்பும் கலந்த அசைவ உணவுகள் தயாரிக்க
இதைப் பயன்படுத்தலாம். ஆந்திரா மற்றும் கோவாவில் இந்த மசாலா வகை புழக்கத்தில் இருக்கிறது.
பதோயோ (Pathoyo/Patoleo)
மஞ்சள் ஊறுகாய்
மஞ்சள் மிட்டாய்
பசுமையான மஞ்சள்கிழங்கை கத்தியால் மெல்லியதாகச் சீவ வேண்டும். ஒரு பானையில் நீர் ஊற்றி,
அதில் மஞ்சளைப் போட்டு, சிறுதீயில் 10 நிமி டங்கள் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு கருப்பட்டி
கரைத்த தண்ணீரைத் தனிப்பானையில் ஊற்றி, மேலே சொன்ன வெந்த மஞ்சள் சீவல்களையும் அதில்
போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, சூடு ஆறியதும் சுவைக்கலாம்.
விடலபாகா’ (Vidalapaka)
`ஈபெர்ஸ் பாபிரஸ்’ என்கிற எகிப்தின் பழைமைவாய்ந்த மருத்துவ நூலில் கொத்தமல்லி பற்றிய குறிப்பு
இருக்கிறது. ஹிப்போகிரேடஸ் தனது மருந்துகளில் கொத்தமல்லி விதைகளைக் கலந்துகொடுத்ததற்கான
ஆதாரங்கள் இருக்கின்றன. இளம் வயதிலேயே மரணமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர்
துதன்காமெனின் புதைகுழிக்குள் கொத்தமல்லியும் சேர்த்து புதைக்கப்பட்டதாம்!
தனியா, உருள் அரிசி ஆகியவை கொத்தமல்லியின் வேறு பெயர்கள். காரச் சுவையுடன்கூடிய இதன்
விதைகள் பசியைத் தூண்டுவது, சிறுநீரைப் பெருக்கிக் கழிவுகளை வெளியேற்றுவது போன்ற
செயல்களைச் சிறப்பாகச் செய்யும். ‘கொத்தமல்லி குளிர்காய்ச்சல் பித்தமந்தம்… விக்கல் தாகமோடு
தாதுநட்டம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல், `பித்தத்தைக் குறைக்கவும் விக்கல், வாந்தியை நிறுத்தவும்
விந்து சார்ந்த நோய்களைச் சரிசெய்யவும் முக்கியமான மருந்து இது' என்பதை உணர்த்துகிறது.
சமைத்த உணவில் கிராம்பு அல்லது பட்டையின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக உணர்ந்தால், சிறிது
கொத்தமல்லி விதைப் பொடியைத் தூவ, உணவின் சுவை முழுமையடையும். சாம்பார் பொடி, ரசப் பொடி,
மசாலா பொடி என இயற்கை வகையறாக்களில் மல்லிக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. சமையலில்
சேர்க்கப்படும் மிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் இதமான
பொருள் இது.
மல்லி வைத்தியம்
* அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் பித்தத்தைத் தணிக்கும் கொத்தமல்லி
விதைகளைக் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
* டீ மற்றும் காபிக்குப் பதிலாக, தினமும் கொத்தமல்லி பானத்தைப் பருகலாம். சீரகம், சுக்கு, உலர்ந்த
துளசி இலைகள், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றைப் பொடித்து வைத்துக் கொண்டு, நீர்விட்டுக்
கொதிக்கவைத்து, சுவைக்குச் சிறிது தேன் சேர்த்துப் பருகலாம்.
* வாய் நாற்றம் நீங்க, கொத்தமல்லி விதைகளைப் புதினா இலைகளோடு சேர்த்து மென்று சாப்பிடலாம்.
`கொத்தமல்லி விதைகளுக்குள் இருக்கும் சிறிய முனைகளைத் தனியாகப் பிரித்து, உப்பு நீர் சேர்த்துத்
தயாரிக்கப்படும் மவுத்-பிரெஷ்னர், குஜராத் மாநிலத்தில் பிரபலம்.
எப்படி வாங்குவது?
கொத்தமல்லி விதைகளில் இந்திய ரகம் தவிர ஐரோப்பா, மொராக்கோ, ரோமானியா ஆகிய பகுதிகளில்
இருந்துவரும் வகைகளும் உண்டு. பொடித்த கொத்தமல்லி விதைகளை வாங்குவதைவிட, முழு
விதைகளாக வாங்குவதே சிறந்தது. பொடித்த விதைகளின் வீரியம் விரைவில் குறைந்துவிடும். முழு
விதைகளின் வீரியமோ ஆண்டுக்கணக்கில் நிலைத்திருக்கும். வறுத்த பிறகு விதைகளைப் பொடியாக்கி,
சமையலில் பயன்படுத்தினால் நறுமணம் வீசும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை இருப்பதால், குழம்பு
மற்றும் சூப் வகைகளைக் கெட்டியாக்க கொத்தமல்லி துணைபுரியும். வறுக்கும் நேரத்தைப் பொறுத்தும்,
அதை அரைக்கும் நேரத்தைப் பொறுத்தும் கொத்தமல்லி வாசனையை மாற்றிக்கொண்டே இருக்கும்.
வடகம்: கொத்தமல்லி, மிளகு, திப்பிலி, கறி உப்பு, கிராம்பு, ஓமம், கடுக்காய் தலா 30 கிராம் எடுத்து
நெய்விட்டு வதக்கி இஞ்சி 250 கிராம் சேர்த்து அனைத்தையும் தயிர்விட்டு நன்றாக அரைத்துக்கொள்ள
வேண்டும். சுண்டைக்காய் அளவு வடகங்களாகச் செய்து, உணவுக்குத் துணையாகச் சாப்பிடலாம். ஜீரணச்
சக்தியை அதிகரிக்கும் இந்த வடகம், சுவையிலும் சளைத்ததல்ல.
டாபில் (Tabil): துனிஷிய நாட்டின் பிரபல மசாலா வகை இது. அரை கப் கொத்தமல்லி விதையையும்
இரண்டு டீஸ்பூன் சீமைச் சோம்பு விதைகளையும் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு
டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் பூண்டுப்பொடியுடன் நன்றாகக் கலந்து பத்திரப்படுத்தவும். குழம்பு
வகைகளில் இதைப் பயன்படுத்தினால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
மலேசியன் கறி பேஸ்ட்: கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு தலா இரண்டு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன்
சோம்பு, சிறிய லவங்கப்பட்டை என அனைத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு
டீஸ்பூன் இஞ்சி, கால் கப் வேர்க்கடலை, நான்கு பூண்டுப் பற்கள், நான்கு சின்ன வெங்காயம் சேர்த்து
ஒன்றாக அரைத்து, மேற்சொன்ன பொடியுடன் கலந்துகொள்ளவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்,
ஒரு டீஸ்பூன் அரைத்த எலுமிச்சை புல், கால் கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து
அரைத்து உருவாக்கப்பட்ட கலவை மலேசிய சமையல் அறைகளில் பிரசித்தம். அசைவ
வகையறாக்களுக்கும் இந்தக் கலவைக்கும் ஏகப் பொருத்தம்.
இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி, தேனில் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டால்
நரை, திரை, மூப்பு சீக்கிரம் நெருங்காது என்கிறது சித்த மருத்துவம். இந்த ‘நரை திரை மூப்பு’ என்பதில்
ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை அவிழ்ப்பதற்காக இஞ்சி சார்ந்து இன்றும் பல்வேறு ஆராய்ச்சிகள்
நடக்கின்றன. இதன் முடிவுகளோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டு
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன.
இஞ்சி மற்றும் சிறிது புதினா இலைகளை வெண்ணெய் சேர்த்து அரைத்து, உணவுகளுக்குத் தொட்டுக்
கொள்ளலாம். பழத்துண்டுகளின் மீதும் பனிக்கூழ்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட, சுவை
அதிகரிக்கும். குரல் கம்மல் இருக்கும்போது, தோல் சீவிய இஞ்சியை மென்று அதன் சாற்றைக்
கொஞ்சமாக விழுங்கினாலே உடனடியாகப் பலன் கிடைக்கும். உணவைச் சாப்பிட்டு முடித்ததும், சிறிய
இஞ்சித்துண்டை வாயில் போட்டு சுவைக்கும் ஆரோக்கியமான பழக்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இருந்துள்ளது.
இஞ்சிச் சாற்றோடு தேன் சேர்த்துப் பாகுபோல செய்து ஏலம், ஜாதிக்காய், கிராம்பு போன்றவற்றின்
பொடி சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். அவ்வப்போது சிறு நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு
சுவைத்துச் சாப்பிட, வயிற்றுப்பொருமல், வாய்வுக்கோளாறு, வாந்தி போன்றவை சாந்தமடையும். `இஞ்சி
முரப்பா’ செரிமானக் கோளாறு, வாய்வுக்கோளாறை விரட்ட பல கால மாகப் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
கோதுமை மாவு, பால், தேன், சர்க்கரை, இஞ்சி, ஏலம், மிளகு சேர்த்து பழங்காலத்தில் தயாரிக்கப்படும்
‘சம்யவா’ என்ற இனிப்பு பற்றி உணவு நூல்களில் குறிப்புகள் காணப்படுகின் றன. உடலுக்கு பலமூட்டும்
பானகம், குடலுக்கு நன்மை தரும் மோர், பல விதங்களில் நலம் பயக்கும் கரும்புச் சாறு போன்ற பான
வகைகள் தொடங்கி, பெரும்பாலான நமது உணவுத் தயாரிப்புகளில் நுண்கூறுகள் நிறைந்த இஞ்சி
சேர்க்கப்படுகிறது. சைனசைட்டிஸ் பிரச்னைக்குப் பயன்படுத்தப்படும் நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த
மருந்தை, இஞ்சிச் சாற்றில் உரைத்து வெளிப்பிரயோகமாக பற்றுபோட, விரைவாக நிவாரணம்
கிடைக்கும்.
பானைக்குள் ஈரமணலை நிரப்பி, அதில் இஞ்சியைப் புதைத்து, அவ்வப்போது ஈரம் குறையாமல் நீர்
தெளித்துவந்தால், சில வாரங்களில் இஞ்சி வளரத் தொடங்கிவிடும். தேவையானபோது, அதிலிருந்து
இஞ்சித் துண்டுகளை எடுத்துப் பயன் படுத்தலாம். இஞ்சியின் தோலில் நச்சுப் பொருள்கள் இருப்பதால்,
தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும்.
நமது ஆரோக்கியத்துக்கு உதவும் இஞ்சி எனும் மாமருந்துக்கு நாம் நன்றி சொல் கிறோமோ
இல்லையோ, நன்றி மறவா நம் செரிமான உறுப்புகள், நமக்குத் தெரியாமலேயே நன்றி
கூறிக்கொண்டேதான் இருக்கின்றன.
இஞ்சிச் சூரணம்
500 கிராம் இஞ்சியின் தோலைச் சீவி, சிறிது சிறிதாக நறுக்கி, காயவைத்து, அதை நெய்யில் லேசாகப்
பொரிக்க வேண்டும். பிறகு 250 கிராம் அளவு சீரகத்தை லேசாக வறுத்து, இஞ்சியுடன் சேர்த்து அரைத்து
வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் 750 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மூன்று விரல் அளவு இஞ்சிச் சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வாந்தி, வயிற்று
மந்தம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி மணப்பாகு
250 கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறு
தீயில் கொதிக்கவைத்து பாகுபதத்தில் இறக்கிப் பயன்படுத்தலாம். இதைத் தினமும் அரை டீஸ்பூன்
அளவு சாப்பிட்டுவந்தால் சுவையின்மை, பசியின்மை தீரும்.
இஞ்சி டீ
லா-காமா மசாலா!
ஒரு டீஸ்பூன் அரைத்த இஞ்சி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு
டீஸ்பூன் லவங்கப்பட்டை, ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்
கலந்து வைத்துக்கொள்ளலாம். இதை `லா-காமா’ மசாலா என்பார்கள். மொராக்கோ நாட்டின் குழம்பு
வகைகள், சூப் வகைகள், மண்பானையில் சமைக்கப்படும் `டகைன்’ (Tagine) எனப்படும் பாரம்பர்ய
உணவு என அனைத்திலும் மருத்துவ குணம்மிக்க `லா-காமா’ மசாலா சேர்க்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு
இது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்’ (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம்,
அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச்
சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்
கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை
நீக்கும் திறன் கொண்டது. ‘பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்’ எனத் தொடங்கும் சித்தர்
அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது.
ஒரு கிராம்பைத் தீயிட்டுக் கொளுத்தி, சமைத்து முடித்த உணவுகளில் மேலோட்ட மாகப் புதைத்து, ஒரு
பாத்திரத்தைக் கொண்டு மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உணவின் மணமும் சுவையும்
பல மடங்கு அதிகரித்திருப்பதை உணரலாம். ராஜஸ்தானி சமையலில் இந்த `கிராம்பு புகையூட்டல்’
முறை அதிகளவில் பின்பற்றப் படுகிறது.
மண்பானைச் சமையலின் சிறப்பை அதிகரிக்க, பானைக்குள் சிறிது நெய் சேர்த்து, ஒரு கிராம்பைப்
போட்டு, சில துளிகள் நீர்விட்டு, சிறு தீ மூட்டி மூடிவிட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு கிராம்பின்
மருத்துவக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட மண்பானையில் பாரம்பர்யச் சமையலைத் தொடங்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமங்களில் இன்றைக்கும் `மண்பானைச் செறிவூட்டல்’ நடைமுறையில்
இருக்கிறது.
பொடித்த கிராம்பு, தோல் சீவிய சுக்கு தலா 50 கிராம், வறுத்த ஓமம், இந்துப்பு தலா 60 கிராம் எடுத்து
ஒன்றாகக் கலக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பசியை
அதிகரிக்கச் செய்து முறையான செரிமானத்தைக் கொடுக்கும். விந்தின் தரத்தை மேம்படுத்த உதவும்
சித்த மருந்துகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீரகம் தலா 30 கிராம் சேர்த்துப்
பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் கிராம்புப்பொடி சேர்த்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.
விலாமிச்சை வேர், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கிராம்பு வடகம்’ மயக்கம்,
வாந்தி போன்ற பித்த நோய்களைக் குறைக்க உதவும். தொண்டைப்புண் இருப்பவர்கள், ஒரு கிராம்பை
எடுத்து லேசாக வதக்கி, தேனில் நனைத்துச் சுவைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வாந்தி
உணர்வு ஏற்படும்போது, ஒரு கிராம்பை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பயன்தரும். கிராம்பு,
புதினா, திருநீற்றுப்பச்சிலை, ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதன் வாசனையை முகர்ந்தால்
உடலும் மனமும் உற்சாகமடையும்.
இரண்டு ஆப்பிள் பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு
நீர் சேர்க்க வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஐந்து கிராம்பு, அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அந்தப் பாத்திரத்தின்மீது ஏடு கட்டி, ஐந்து
முதல் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த ஆப்பிள் துண்டுகளின்மீது தேன்
ஊற்றிப் பரிமாறினால் மணம் கமழும் சிற்றுண்டி தயார். கிராம்பில் உள்ள நறுமண எண்ணெய்கள்,
பிரத்யேக வாசனையுடன் உங்களைப் பரவசப்படுத்தும்.
சீன மசாலா
மூன்று அன்னாசிப்பூ, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கிராம்பு, ஒரு
லவங்கப்பட்டை அனைத்தையும் ஒன்றாகப் பொடித்தால் சீன மசாலாப் பொடி தயார். சீன ருசியை
விரும்புபவர்கள் நோய் உண்டாக்கும் அஜினோமோட்டோவைத் தவிர்த்துவிட்டு, ஐந்து நறுமணமூட்டிகள்
நிறைந்த சீன மசாலாவை (Five Spices powder) சமையலுக்குப் பயன் படுத்தலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏலக்காய், தோல் சீவிய சுக்கு, லவங்கப் பட்டை... மூன்றையும் ஒன்றாகப் பொடித்து, 500 மில்லி கிராம்
தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வயிற்றுப்பொருமல், கழிச்சல் குணமாகும். லவங்கப்பட்டை,
சோம்பு, கிராம்பு, சுக்கு தலா ஐந்து கிராம் எடுத்துக்கொண்டு 500 மில்லி தண்ணீர் சேர்த்துக்
கொதிக்கவைக்க வேண்டும். 100 மில்லியாக வற்றியதும் அதைப் பருகினால் உடலில் தோன்றும் அரிப்பு,
எரிச்சல் மறையும். ஒவ்வாமைப் பிரச்னையைப் போக்கும்.
சுவாசக் கோளாறுகளைக் குணமாக்குவதிலும் லவங்கப் பட்டையின் பங்கு அதிகம். சுக்கு, மிளகு, திப்பிலி,
லவங்கப்பட்டை - வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, சிறிது துளசி இலையும் கருப்பட்டியும் சேர்த்துக்
குடிநீராகக் காய்ச்சிக்குடித்தால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாகக் குறையும். தொண்டையை
அடிக்கடி செருமவைக்கும் வறட்டு இருமலுக்கு, அதிமதுரத்துடன் லவங்கப்பட்டை சேர்த்துப்
பொடியாக்கி ஐந்து சிட்டிகை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிளகு, பட்டை, இஞ்சி கலந்த சுவைமிக்க தயிரை மதிய
உணவுக்குப் பிறகு, தென்தமிழக மக்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
தேனுடன் லவங்கப்பட்டை, மிளகு, திப்பிலி மற்றும் சில நறுமணமூட்டிகளை ஒரு ஜாடியில் சேர்த்து சில
நாள்கள் உரக்குழிக்குள் புதைத்து, சூரியஒளி விழும்படி தயாரிக்கும் பானம் முற்காலத்தில் புகழ்
பெற்றதாக இருந்தது. பண்டிகை நாள்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பானமாகவும் இது
இருந்திருக்கிறது. சுவையுடன் செரிமானத்தைத் தூண்டுவதற்காக இது பயன்பட்டுள்ளது. இந்தப் பானத்தில்
சேரும் நறுமணமூட்டிகளுக்கு `சம்பரா’ பொருள்கள் என்று பெயர்.
சீரகம், மிளகு, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, கொத்தமல்லி விதைகள் (தனியா), சித்தரத்தை, வெட்டிவேர்,
லவங்கப்பட்டை, அரைத்த இஞ்சி, பூண்டு போன்றவற்றை ஒரு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்ட
வேண்டும் (இதுவே பொட்லி மசாலா அல்லது பொட்லி முறை எனப்படும்). இறைச்சியை, பானை
அல்லது குக்கரில் நீர் ஊற்றி வேகவைக்கும்போது,அவற்றுடன் மேலே சொன்ன பொட்டலத்தையும்
போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். அந்த நீரைக்கொண்டே, பிரியாணி அரிசியை வேக வைக்க
வேண்டும். பிறகு பிரியாணியை முழுமை யாகச் சமைப்பதற்குத் தேவையான கறி மசாலா, கறித்
துண்டுகள் சேர்த்துப் பக்குவப்படுத்தினால் சுவையான, மணம் நிறைந்த பிரியாணி ரெடி. பிரத்யேகமான
மணம் மற்றும் சுவைகொண்ட ஹைதராபாத் பிரியாணியில் ‘பொட்லி முறை’ முக்கியப் பங்குவகிப்பது
குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு ஸ்பெஷல்
கனிந்த இரண்டு வாழைப் பழங்கள், ஒரு கப் பால், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடி, நான்கு
முட்டைகளின் வெள்ளைக் கரு, இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து
மசிக்க வேண்டும். அதைத் தோசைக்கல்லில் ஊற்றி இரண்டு கோதுமை பிரெட்களை அந்தக்
கலவையின்மீது வைத்து, அவ்வப்போது முன்னும் பின்னும் திருப்பிப் பொன் வறுவலாக வறுத்து,
இறுதியில் லவங்கப்பட்டைப் பொடியைத் தூவி உண்ணலாம். பிரான்ஸ் மக்களின் பெரும்பாலான காலை
உணவு இதுதான். சில வெளிநாட்டு உணவுகளைப் போல, நோய் உண்டாக்கும் உணவாக இல்லாமல்,
சுவையுடனும் ஊட்டத் தைக் கொடுக்கும் ரெசிப்பியாகவும் இது இருக்கும்