மிருகங்கள் மனிதர்களைவிட சிறந்தவை எனக் கவிஞர் வைரமுத்து கூறுவதன் காரணங்களை ஆராய்க.
‘ஐந்து பெரிது ஆறு சிறிது’ என்ற கவிதை கவிஞர் கவிபேரரசு வைரமுத்து
அவர்களால் இயற்றப்பட்ட ஒரு கவிதையாகும். இக்கவிதையின் மூலம் கவிஞர் மனிதர்களைவிட மிருகங்கள் மிகச் சிறந்தவை என்று தக்க சான்றுகளுடனும் காரணங்களுடனும் குறிப்பிட்டிருக்கின்றார்.
முதலாவதாக, ‘சீ மிருகமே ! என்று மனிதனை மனிதன் திட்டாதே’ என்ற
வரிகளின் மூலம் மனிதனை மனிதன் எந்த மிருகத்திற்கும் ஒப்பிட்டு திட்ட வேண்டாம் என்று கூறுகின்றார். அதன் பின், விலங்குகள் தேவைக்கு அதிகமாக உணவு உண்பதில்லை, ஆனால் மனிதர்களோ தேவைக்கு அதிகமாக உணவை உண்டு தொப்பை வளர்ப்பதுதான் வழக்கம் என்று கவிஞர் அறுதியிட்டு உறுதியாகக் கூறியிருக்கின்றார்.
மேலும், மனிதர்களைவிட மிருகங்கள் சிறந்தவை என்று கவிஞர் கூறுவதற்குப்
பல காரணங்கள் உள்ளன. மனிதர்கள் பேராசை மிகுந்தவர்கள் என்பதால்தான் பல வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுகின்றனர். ஆனால், எந்தப் பறவையோ அல்லது மிருகமோ கூடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதும் இல்லை, நிலங்களையும் திருடுவதில்லை. இதனால், கவிஞர் ஆறரிவு படைத்த மனிதர்களைவிட ஐந்தறிவு படைத்த மிருகமே சிறந்தது என்று மிகைப்படுத்திக் கூரியிருக்கின்றார்.
பிறகு, கூட்டு வாழ்க்கை அழியாதிருப்பது காட்டினுள் வாழும்
மிருகங்களிடையேதான் என்று கவிஞர் ‘ கவனி மனிதனே ! கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள்தான் !’ என்ற வரிகளின் மூலம் உணர்த்துகின்றார். ஆனால், மனிதர்களோ தனித் தனி குடும்பங்களாக வாழ்கின்றனர். இதற்கு, கூட்டு வாழ்க்கை வாழும் மிருகங்களே மிகச் சிற்ந்தவை என்று கவிஞர் குறிப்பிட்டு கூறியிருக்கின்றார். அதுமட்டுமின்றி, மனிதர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை வெறும் கருத்துகளாகத்தான் பேசிக் கொள்கின்றனர். அவற்றை வாழ்க்கையில் அமல்படுத்துவதில்லை. ஆனால், வாயில்லா ஜீவனான புறா அந்தக் கொள்கையை தனது வாழ்க்கையில் அமல்படுத்திக் கொண்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, புறா பிற ஜோடியைத் தேடிச் செல்வதில்லை. ஆனால் மனிதர்களோ, அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து,
‘பூகம்பம் வருகுது எனில்,
அலைபாயும் விலங்குகள், அடிவயிற்றில் சிறகடிக்கும் பறவைகள், இப்போது சொல், அறிவில் ஆறு பெரிதா ? ஐந்து பெரிதா ?
என்ற வரிகளின் மூலம் கவிஞர், நடக்கப்போகும் விஷயங்களை
அனுமானிக்கும் திறன் கொண்ட மிருகங்கள் தான் மிகச் சிறந்தவை என்று கூறுகின்றார். உதாரணத்திற்கு, ஓர் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அவற்றை முதலில் அறிந்து கொள்வது மிருகங்கள்தான். மனிதர்கள் அப்படி உடனே அறியும் ஆற்றலைப் பெறவில்லை. இதனால், மிருகங்களே சிறந்தவையாகும்.
இறுதியாக, மனிதர்களாக பிறந்த நாம், மற்றவர்களை மிருகத்திற்கு ஈடாக
திட்டக் கூடாது என்று கவிஞர் இக்கவிதையின் மூலம் உணர்த்துகின்றார்.