ஏடு தூக்கி பள்ளியில் இன்று பயிலும் மாணவன் தான் நாடு காக்கும் தலைவனாய்
நாளை விளங்க போகிறான்,தித்திக்கும் தேன் தமிழ் ,திக்கட்டும் ,பரவட்டும் முத்தமிழ்
தமிழ் தாய்க்கு என் முதற்கண் வணக்கம். என் பெயர் தாரணி பிரகாஷ் நாகராஜ் , நான் தேசிய வகை ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் 4 வள்ளுவரில் பயில்கிறேன்.இவ்வினிய வேளையிலே நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு இல்லிருப்புக் கற்றல். அவையோரே,இல்லிருப்புக் கற்றல் என்பது கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ,நம் அரசாங்கம் செயல்படுத்தியிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையானது நாட்டு மக்களின் பொது நலனை சீர்தூக்கிப் பார்த்து எடுக்கப்பட்ட முடிவாகும்.எனவே மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதை மாற்றி அமைத்து , புதிய கோணத்தில் மாணவர்கள் அவரவர் வீட்டு சூழலில் கற்கும் நிலை உருவாகியுள்ளது. முதல் கட்ட இல்லிருப்பு கற்றல் நம் நாட்டில் ஏப்ரல் மாதம் 2020 –இல் தொடங்கியது.ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லிருப்புக் கற்றல் என்பது ஒரு புது அனுபவமாக இருந்ததால் ஆசிரியர்கள் மாயத் திரையில் கற்றல் கற்பித்தலை மேற்கொண்டனர்.காணொளி வாயிலாகவும் வலையொளி வாயிலாகவும் தங்களின் பாடங்களின் விளக்கத்தைப் பதிவு செய்து புலணத்தில் அனுப்பினர். மேலும் பாடத்தை ஒட்டிய விளக்கத்தை குரல் பதிவிலும் அனுப்பி வைத்தனர் , இல்லிருப்புக் கற்றலில் மாணவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்ட அவர்களுக்காக மின்னியலில் பல்வகை புதிர்ப்போட்டிகள் நட த்தி பாடத்தில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தனர். இது போன்ற பல்வகை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக தங்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சபையோரே, இணைய வசதி இல்லாத மாணவர்களையும் இல்லிருப்புக் கற்றலில் ஈடுபடுத்த வேண்டி அவர்களுக்காக சிப்பம் , பிரத்தியேக கற்றல் கற்பித்தல் பயிற்சிகளைத் தயார் படுத்தி ,மாணவர்களுக்கு தகவல் சொல்லும் செயல் திட்டங்களை இல்லிருப்புக் கற்றலில் செயல்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் , பெற்றோர்களின் முழு ஒத்துழைப்போடு இல்லிருப்புக் கற்றலில் மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்தி வருகின்றனர். ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? என்ற பழமொழிக் கொப்ப ஒருவர் மட்டும் செயல்படுத்தும் திட்டம் இல்லிருப்புக் கற்றல் அல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்துவதே இல்லிருப்புக் கற்றல். இரண்டாம் கட்ட இல்லிருப்புக் கற்றலில். இயங்கலை வகுப்புகளை நேரலையில் நடத்தும் போது மாணவர்கள் ஆசிரியர்களிடம் கலந்துரையாட ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.மாணவர்கள் பாடத்தில் ஏற்படும் ஐயங்களை ஆசிரியரிடம் கேட்டு விளங்கிக் கொள்ள முடிகிறது.அதோடு மட்டுமல்லாது ஆசிரியரகள் மாணவர்களின் வாசிப்பு,எழுத்து பயிற்சியினை உடனுக்குடன் பார்த்து மாணவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடிகிறது. இல்லிருப்புக் கற்றலில் வேலைக்குச் செல்லும் குடும்பங்களால் திறன்பேசி,மடிக்கணினி போதாமையால் நேரலையில் இணைய முடியாத மாணவர்கள் இரவு நேரங்களில் ஆசிரியர் புலனத்தில் பகிர்ந்து கொண்ட பாடங்களை செய்து அனுப்புவர்களும் உள்ளனர். அவையோரே, எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வதுறைவது அறிவு என்று பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர் கூறியது போல உலக சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவரும் அனைத்தையும் நமது அறிவால் எதிர்கொண்டு அதற்கேற்ப துலங்குதலே சாலச் சிறந்த செயலாகும் அவையோரே , நம் கல்வி அமைச்சு இந்நாட்டில் பயிலும் அனைத்து ஆரம்பப்பள்ளி,இடைநிலைப்பள்ளி ,கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் மின்னஞ்சலை DELIMA தளத்தின் வாயிலாக உருவாக்கியுள்ளது , மாணவர்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒருங்கே ஒன்றிணைத்து மாணவர்கள் நிகழ்நிலை கல்வியை மேற்கொள்ள ஒரு அடித்தளமாக திகழ்ந்து வருகின்றது. மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஆசிரியர்களுக்கும் தேவையான அனைத்து ஆவணங்களும் DELIMA தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளம் இல்லிருப்புக் கற்றல் கால கட்டத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பேருதவியாக இருக்கின்றது. சபையோரே,நம் மலேசிய கல்வி முறையில் முக்கியத் தேர்வாகக் கருதப்படும் எஸ்.பி.எம் தேர்வை சென்ற வருடம் எழுதிய மாணவர்கள் , இல்லிருப்புக் கற்றலில் ஈடுபட்டிருந்தாலும் 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டு மாணவர்களின் அடைவு நிலை விகிதம் 4.80 மாக உயர்ந்துள்ளது.இவ்வடைவு நிலை சென்ற 5 வருடத்தில் மிகச் சிறந்த அடைவு நிலையைக் காட்டுகிறது.இதன் மூலம் கல்வி கற்பதற்கு இல்லிருப்புக் கற்றல் தடையில்லை என்பதை நாம் உணர முடிகின்றது. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற குறளின் வழி ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வியே,என்பதை அனைவரும் உணர்ந்து இல்லிருப்புக் கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சபையோரே , இல்லிருப்புக் கற்றலை மேற்கொள்ள ஆயிரம் சவால்கள் வந்தாலும் அதனை உடைத்தெரிந்து கல்வி கற்கும் சமுதாயமாக மாறுவோம்.இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி.