குழந்தையாக அப்பாவின் கரம் பிடித்து நடப்பது ஒரு தனி சுகம்தான்! 20
வயதிலும் அப்பாவின் கரம் பிடித்து நடக்கலாம்! ஆனால், அந்தப் பிடி வேறு! அந்த சுகம் வேறு! அந்த நடையும் வேறு!
பற்று (பக்தி) வேறு! பின்பற்றுதல் வேறு! யோவான் 20/6ல் மகதலா
மரியாவிடம், “என்னைப் பற்றிக் கொள்ளாதே!” என்று இயேசு சொல்வார். ஆனால் அதே இயேசு, “என்னைப் பின்பற்று” என்று சீடர்களைப் பார்த்து சொல்வார். இரண்டையும் புரிக!
கிறிஸ்மஸ் எனக்கு இனிமையானது! மார்கழிக் குளிரும், மத்தாப்பு
மலர்களும் மனதைக் கொள்ளையடிக்கும் காலம் இது. ஆனால், கல்வாரியும் கல்வாரிக்கான காரணங்களும் இல்லாமல் போயிருந்தால், குழந்தை இயேசுவும் கிறிஸ்மஸ் பெருவிழாவும் இருந்திருக்காது என்பதையும் உணரவேண்டும்!
குழந்தை இயேசு வளர்ந்து ஞானம் பெற்றார்! (லூக் 2/40) என்று
நற்செய்தியாளர் சொல்கிறார்! அந்த ஞானத்தை நோக்கிய வளர்ச்சி என்பது இதுதான், சடங்குகளைவிட மனிதமே பெரிது என்றார்! அன்பைவிட இரக்கமே பெரிது என்றார்! இரக்கத்தைக் காட்டிலும் நீதியே பெரிது என்றார்! இவையெல்லாம் அடிமடியில் கைவைக்கிற விஷயங்கள்! எனவேதான், திட்டமிட்டு தீர்த்துக்கட்டினார்கள்!
இரக்கத்தையே விரும்புகிறேன்,” என்பதன் பொருளைப் புரியச் சொன்னார்.(மத் 9/13) வழிபாடுகளை ஊக்குவித்த வணிகத்தை கோவிலில் போய் புரட்டிப் போட்டார்! (லூக் 19/45)
கோவிட் பெருந்தொற்று காலத்தில், நமது கோயில்கள் மூடப்பட்டன!
“பக்தர்கள்” தவிதவித்துப் போனார்கள்! சிலர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பூசை வைத்துக் கொண்டிருந்தார்கள்! “மொத்தக் கிருத்துவமுமே சடங்கின்றி செத்துவிடும்” என்பதுபோல சிலர் பதறினர்! ஒரு சமூக நெருக்கடியில் கிறித்துவத்தின் ஆழ்பரிமாணங்களை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அடையாளங்களுகாக ஏங்கி நின்கிற “சிறு”கூட்டமானோம்!. பசியாற்றுதல், பிணிபோக்கல், “உடனிருத்தல்”, உளத்தேற்றல் போன்ற எண்ணற்ற ஆழ்பரிமாண வாய்ப்புகளை நாம் இழந்தோமோ? எனக் கேட்க தோன்றுகிறது! பற்று அளவோடு இருப்பதே அழகு! என் பிள்ளை, என் குடும்பம், என் சாதி, என் பங்கு, என் சபை, என் திருஅவை என்று வாழ்வது அன்புதான்! (இதுகூட இல்லாமல் இருக்கிறார்களே, என்கிறீர்களா?) தெருவில் உலவும் நாயிடம்கூட இந்த அன்பைக் காணலாமே! ஆனால் இரக்கம் அதனினும் மேலானது! உன் சமூகத்தைச் சாராத, உன் சாதியைச் சாராத, உன் சபையின் திட்டங்களைச் சாராத எத்தனையோ சூழல்களில் நீங்கள் இறங்கமுடியும், இயங்கவும் முடியும்! பசி பிணி போக்கலும் நீதிக்கான தேடலும் குறுகிய வட்டங்களை உடைக்க வேண்டும்! சாதி, மதம், மொழி, இனம் கடக்க வேண்டும்! இயேசுவின் அத்துமீறல் ஆன்மீகம் என்பது இதுவே! தன் இனத்துக்காகவே வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த இயேசுவுக்கு கனனேயப் பெண் இடித்துரைத்தாள். “நீர் கடந்து போக வந்தவர்!” என்றாள் (மாற் 7/24 29) அங்கே, இயேசு மீண்டும் பிறந்தார்!
கிறிஸ்மஸில் புரட்சி செய்கிறேன் என்று சொல்லி 2 கிலோ
பிரியாணியை அதிகம் செய்து ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்தேன்!” என்பது இரக்கம், பகிர்வு! இரக்கத்தினால் மட்டுமே இந்த நாட்டில் நல்ல உணவும் உடையும் கிடைக்கும் என்றால் நீதி செத்து நாறி விட்டது என்றே பொருள்! பணமும் பொருளும் எங்கோ தேங்கி யிருக்கிறது என்றால் அது சுரண்டலின் விளைவு என்றே புரிய வேண்டும்! அது அரசு கஜானாவானாலும் சரி, கோயில் உண்டியல்களானாலும் சரி, அல்லது உங்கள் வங்கிக் கணக்குகளா னாலும் சரி! நீங்கள் அதை எப்படிப் பொத்திப் போர்த்தி ஞாயப்படுத் தினாலும் அது புடைநாற்றமெடுக்கவே செய்யும்!
தோட்டக்காரருக்கும் சமையல்காரருக்கும் காவலருக்கும் ஆகக் குறைந்த
ஊதியத்தைக் கொடுத்துவிட்டு கிறிஸ்மஸ் அன்று கேக், புது டிரஸ், கொஞ்சூண்டு காரம் இனிப்பு என்று கொடுப்பதெல்லாம் சாக்கடை நாற்றத்தை மறைக்க பூசும் புனுகு மாதிரி!
எனவேதான் சொல்லுகிறேன், ஆண்டுதோறும் குழந்தை
இயேசுவைத்தானே கொண்டாடுகிறீர்கள்! இந்த ஆண்டு, கொஞ்சம் வளர்ந்த இயேசுவையும் கொண்டாடுவோமே!!
பக்தி என்பது வடசொல்! பற்று என்பதே தமிழ் சொல்! “பற்றிக்
கொள்ளாதே” என்பதும், “என்னைப் பின்பற்று” என்பதும் கட்டளைகள்!