சிறு தவளை ஒன்று புல்வெளியில் தாவித் தாவி விளையாடிக்
கொண்டிருந்தது. அவ்வேளையில் முரட்டு எருது ஒன்று அங்கு மேய்ச்சலுக்காக வந்தது. அந்தச் சிறு தவளை தன் வாழ்நாளில் அவ்வளவு பெரிய எருதைக் கண்டதே இல்லை. மிரட்சி அடைந்த சிறு தவளை தாவிக்குதித்துத் தான் வாழும் குளத்துக்கு விரைந்து சென்றது. சிறு தவளை தன் தந்தையிடம் தான் கண்டதைக் கூற விரும்பியது. அப்போது தந்தை தவளை ஒரு தாமரை இலைமீது ஓய்வாகப் படுத்திருந்தது. “அப்பா நான் உலகத்திலேயே மிகப் பெரிய விலங்கை இன்று கண்டேன்,” என்று பதற்றத்தோடு கூறியது சிறு தவளை. அதற்குத் தந்தை தவளை, “ மகனே, நீ கூறியதில் ஓரளவு உண்மை இருந்தாலும் எந்தவொரு மிருகமும் என்னைவிடப் பெரியதாக இருக்க முடியாதே!” என்றது கர்வமாக. “இல்லை,அப்பா நீங்கள் சொல்வதுதான் தவறு. அந்த விலங்கு உங்களைவிடப் பலமடங்கு பெரியது!” என்று விவாதித்தது சிறு தவளை. தற்பெருமை கொண்ட அந்தத் தந்தை தவளை முட்டாளாகவும் இருந்தது. அது தன் உருவத்தைப் பெரிதாக்கிடக் காற்றை உள்ளே இழுத்தது. அதன் வயிறு சற்றுப் பெருத்தது. “நீ பார்த்த விலங்கு இவ்வளவு பெரியதாக இருக்குமா?” எனத் தன் வயிற்றைக் காட்டிக் கேட்டது தந்தை தவளை. “இப்போதும் கூட உங்களைவிட அந்த விலங்குதான் பெரியது,” என்றது சிறு தவளை. தந்தை தவளைக்குக் கோபம் ஏற்பட்டது. அது காற்றை மீண்டும் உறிஞ்சி தன் வயிற்றை மீண்டும் பெரியதாக்கியது. பலூன் போல புடைத்திருந்த தன் வயிற்றைப் பார்த்த தந்தை தவளைக்குப் பெருமை ஏற்பட்டது. “இப்பொழுது உருவத்தில் நான் தானே பெரியவன்,” என்றது கர்வத்துடன். “இல்லவே இல்லை!” என்று மறுமொழி கூறியது சிறுதவளை. முட்டாள் தந்தை தந்தை தவளைக்குக் கோபம் தலைக்கேறியது. தந்தை தவளைக் காற்றை மீண்டும் உறிஞ்சியது. விடாமல் உறிஞ்சி இழுத்தது. அதன் உருவமும் பானை போல் பெருத்தது. தந்தை தவளையின் வயிற்றில் காற்று அளவுக்கு அதிகமாக நிரப்பப்பட்டதால் அது ‘படாரென’ வெடித்துச் சிதறியது.