தமிழ்செய்யுமாறு. அவையினர் அனைவருக்கும் அடியேனின் நற்றமிழ் வணக்கம். என் பெயர் ............................. ‘சுகாதாரம்’ பற்றி அடியேன் இப்பொழுது உங்கள் முன் உரையாற்றவிருக்கிறேன்.
பேரன்புமிக்க அவையோரே, சுகாதாரம் என்றால் என்ன? ஆம்.
சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம் ஆகும்.
இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில்
ஒன்று மக்கள் சிறந்த முறையில் சுகாதாரத்தைப் பேண தவறியதாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் மட்டுமே பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள். இ·து
என்றுமே மாறா உண்மை ஆகும். மனித வாழ்வில் சுகாதாரம் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். மனித வாழ்க்கை என்பது நிலையற்ற நீர்க்குமிழி போன்றது. வாழ்க்கையில் நாம் வாழும் நாள்களில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் கட்டாயம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். சுத்தமான காற்று, சத்துள்ள உணவு, தூய குடிநீர், போதுமான உடற்பயிற்சி, பாதுகாப்பான தங்குமிடம், சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை நாம் பெற்று கொள்கின்ற போது தான் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். நல்ல ஆரோக்கியம் ஒவ்வொரு சந்தோசமான மனிதனின் வெற்றியின் இரகசியமாகும். ஆரோக்கியமான மனிதனால் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் நோயாளியாக இருந்தால் அது
அக்குடும்பத்தையே பாதிக்கும். ஆகவே, நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். நாம் நம்மையும் சுத்தமாக வைத்து நமது சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சொத்து, சுகம், வீடு, வாசல், நிலப் புலங்கள் சேர்த்து வைப்பதால் மட்டும் அவர்களால் வாழ முடியாது. அவர்கள் வளமாக வாழ சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கி தருவது ஒவ்வொருவரின் கடமையாகும். நமக்கும் வேண்டும் நமக்குப் பிறகும் இந்தப் பூமி வேண்டும் என்ற நினைப்பை ஒவ்வொருவரும் மனதில் பதிக்க வேண்டும். அன்பிற்கினியவர்களே, நமது வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் நமக்கு உளரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாம் வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் சுகாதாரமான வாழ்வை வாழலாம். இக்காலத்தில் மக்கள் நாகரீக போதைக்கு அடிமையாகி மதுபானம், புகைத்தல், போதைப்பழக்கம் போன்றவற்றால் தமது வாழ்வைச் சீரழித்துக் கொள்கிறார்கள். போதைகளற்ற நல்ல மனிதர்களை இன்று காண்பது மிகவும் அரிதாகி விட்டது. இது பாரிய சீரழிவுக்கு வித்திடும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதே அனைவருக்கும் அதிக நன்மை தரும். ஒரு மனிதன் தினமும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் நோயற்ற வாழ்வை வாழ முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கக் கூடிய பொதுவான எதிர்பார்ப்பே தாம் நலமாக வாழவேண்டும் என்பது தான். நல்வாழ்வு என்ற அடிப்படையான எண்ணக்கருவையே வளர்ச்சியடைந்த நாடுகள் அடிப்படையாகக் கொண்டு தமது நாட்டை வளர்ச்சியடைய செய்கின்றன. சபையினரே, சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் ஆகும். ஊட்டச்சத்துள்ள உணவுகள், நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சியான குடும்பம், போதுமான வருவாய், தரமான சுகாதார சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் இவை அனைத்தும் கிடைக்கப் பெறுவதே சிறந்த நல்வாழ்வாகும். தற்காலத்தில் மனித வாழ்க்கையே பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மனிதனின் ஆயுட்காலமும் குறைந்து வரும் இக்காலக் கட்டத்தில் நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இளம் வயதிலேயே சிலர் கொடூரமான நோய்கள் வந்து இறக்கும் சூழலும் ஆங்காங்கே நிலவி வருகிறது. இதற்குக் காரணம் தவறான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறியதாகும். அண்மை காலத்தில் உலகையே வாட்டி எடுத்த கொரோனா, சுகாதாரத்தைப் பேணாததால் அதிகம் பரவிய நோயாகும். அதற்காகத் தான் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவரி அணிதல், பொது இடங்களிலோ, தனிப்பட்ட இடங்களிலோ பலர் ஒன்று கூடாமல் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதாரத்தைப் பேணும் செயற்பாடுகளைப் பின்பற்ற மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமே அந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. எனதருமை தமிழ் நெஞ்செங்களே, இறுதியாக, நாம் நமது சுகாதாரத்தைக் கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். ‘சுத்தம் சுகம் தரும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சுத்தமான சுகாதாரமான நல்வாழ்வினை வாழ்ந்து வளமான வாழ்க்கையை உறுதி செய்வோம். ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தான் நம்மால் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்று கூறிப் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.